*
1. மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக்
குமாரத்திகள் பிறந்தபோது:
2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக
சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே
தங்களுக்குப் பெண்களைத்
தெரிந்துகொண்டார்கள்.
3. அப்பொழுது கர்த்தர் : என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே
போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற
நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள்
அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில்
பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன்
இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்
மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு
விசனமாயிருந்தது.
7. அப்பொழுது கர்த்தர் : நான் சிருஷ்டித்த மனுஷனைப்
பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு,
மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள்
பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்;
நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு
மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
8. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
9. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில்
இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்;
நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
10. நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப்
பெற்றான்.
11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது;
பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது
சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல்
தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான
யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி
கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப்
பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை
உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை
உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
15. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால்,
பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும்,
அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
16. நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்
தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின்
பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின்
அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
17. வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல
மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை
வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்;
நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன்
குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
19. சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும்
பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு
உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே
சேர்த்துக்கொள்.
20. ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான
மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும்
பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே
காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
21. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித
போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில்
வைத்துக்கொள் என்றார்.
22. நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக்
கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
*
1. கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும்
பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு
முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
2. பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே
காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும்,
ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத
மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு
ஜோடும்,
3. ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும்
உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4. இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும்
பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான்
உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல்
இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.
5. நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம்
செய்தான்.
6. ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு
வயதாயிருந்தான்.
7. ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன்
குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும்
பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
8. தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான
மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும்
பிராணிகள் எல்லாவற்றிலும்,
9. ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில்
பேழைக்குட்பட்டன.
10. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம்
உண்டாயிற்று.
11. நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம்
மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின்
ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின்
மதகுகளும் திறவுண்டன.
12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை
பெய்தது.
13. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும்
காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும்,
அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள்
பிரவேசித்தார்கள்.
14. அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக்
காட்டுமிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித
நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான
சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப்
பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும்
பிரவேசித்தன.
15. இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம்
ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
16. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும்
பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே
பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக்
கதவை அடைத்தார்.
17. ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது,
ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல்
மிதந்தது.
18. ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும்
பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல்
மிதந்துகொண்டிருந்தது.
19. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப்
பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த
மலைகளெல்லாம் மூடப்பட்டன.
20. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு
ஜலம் பெருகிற்று.
21. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும்,
நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும்
பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல்
சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.
22. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும்
நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
23. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப்
பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள்
யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு
நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும்
மாத்திரம் காக்கப்பட்டன.
24. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும்
பிரவாகித்துக்கொண்டிருந்தது.
*
1. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல
காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும்
நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை
வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
2. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும்
அடைபட்டன; வானத்து மழையும் நின்று போயிற்று.
3. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே
வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
4. ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும்
மலைகளின்மேல் தங்கிற்று.
5. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே
வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள்
காணப்பட்டன.
6. நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில்
செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
7. ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப்
பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும்
வருகிறதுமாய் இருந்தது.
8. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு
புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
9. பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா
தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல்,
திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்
பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
10. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப்
பேழையிலிருந்து வெளியே விட்டான்.
11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து
சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு
ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா
பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.
12. பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை
வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
13. அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில்,
முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம்
வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்;
பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
14. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி
காய்ந்திருந்தது.
15. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
16. நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன்
குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
17. உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய
பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல
பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே
திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது
என்றார்.
18. அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன்
மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு
வந்தார்கள்.
19. பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல
பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப்
பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
20. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி,
சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும்
சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப்
பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
21. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது
கர்த்தர் : இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை;
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன்
சிறுவயதுதொடங்கிப்
பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது
செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும்
உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும்
ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
*
1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல
மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும்
உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின்
மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு
ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத்
தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
5. உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப்
பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும்
பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன்
சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால்,
மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம்
மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து
விருத்தியாகுங்கள் என்றார்.
8. பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள்
சந்ததியோடும்,
10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல்
இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம்,
பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற
பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை
ஏற்படுத்துகிறேன்.
11. இனி மாம்சமானவைகளெல்லாம்
ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும்,
பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம்
உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை
ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில்
இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய
தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின்
அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும்
உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில்
மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க
இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும்
உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும்
உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள
சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய
உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
17. இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும்,
நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று
நோவாவோடே சொன்னார்.
18. பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம்
யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
19. இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே
பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு,
தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
22. அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம்
தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த
தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
23. அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை
எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு,
பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை
மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால்,
தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.
24. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது,
தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
25. கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில்
அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
26. சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
27. யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய
கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு
அடிமையாயிருப்பான் என்றான்.
28. ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம்
உயிரோடிருந்தான்.
29. நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து
ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
*
1. நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின்
வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக்
குமாரர் பிறந்தார்கள்.
2. யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய்,
யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
3. கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து,
தொகர்மா என்பவர்கள்.
4. யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம்,
தொதானீம் என்பவர்கள்.
5. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன்
பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும்,
ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
6. காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்
என்பவர்கள்.
7. கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா,
சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான்
என்பவர்கள்.
8. கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே
பராக்கிரமசாலியானான்.
9. இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த
வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு
முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும்
வழக்கச்சொல் உண்டாயிற்று.
10. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே
என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி
ஸ்தானங்கள்.
11. அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும்,
ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
12. நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும்
கட்டினான்; இது பெரிய பட்டணம்.
13. மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும்,
நப்தூகீமையும்,
14. பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய
கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.
15. கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
16. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
17. ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
18. அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும்
பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும்
பரவினார்கள்.
19. கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க்
காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா,
செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
20. இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள
தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும்
காமுடைய சந்ததியார்.
21. சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய
சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய
யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
22. சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்
என்பவர்கள்.
23. ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்
என்பவர்கள்.
24. அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப்
பெற்றான்.
25. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு
என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி
பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
26. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும்,
அசர்மாவேத்தையும், யேராகையும்,
27. அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
28. ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
29. ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்;
இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
30. இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள
மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
31. இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள
தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும்
சேமுடைய சந்ததியார்.
32. தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே;
ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள்
பிரிந்தன.
*