1.
அன்னை வாழி வேண்டு அன்னை உதுக்காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே.
2.
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்
நீல் நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர் மணிக் குரலே.
3.
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்கு அமைந்தனெனால் தானே
தனக்கு அமைந்தன்று இவள் மாமைக் கவினே.
4.
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின் நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வன் அஃது ஊரே.
5.
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணந் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே.
6.
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தன் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
7.
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து
தண் கடல் படு திரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
8.
அன்னை வாழி வேண்டு அன்னை கழிய
முண்டக மலரும் தண் கடல் சேர்ப்பன்
எந் தோள் துறந்தனன் ஆயின்
எவன் கொல் மற்று அவன் நயந்த தோளே.
9.
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல்
நீர் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எந் தோள் துறந்த காலை எவன் கொல்
பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே.
10.
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறிது ஒன்றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே.
1.
அம்ம வாழி தோழி பாணன்
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே.
2.
அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.
3.
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய என்னை
அது கேட்ட அன்னாய் என்றனள் அன்னை
பைபய எம்மை என்றனென் யானே.
4.
அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே.
5.
அம்ம வாழி தோழி பன் மாண்
நுண் மணல் அடை கரை நம்மோடு ஆடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்து நின்றோனே.
6.
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பு
மாலை வந்தன்று மன்ற
காலையன்ன காலை முந்து உறுத்தே.
7.
அம்ம வாழி தோழி நலனே
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை
அணி மலர் துறை தொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
8.
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.
9.
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென் புலக் கொண்கன் வாராதோனே.
20.
அம்ம வாழி தோழி நல மிக
நல்ல ஆயின அளிய மென் தோளே
மல்லல் இருங்கழி நீர் அறல் விரியும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.
1.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே.
2.
கண்டகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென
வெள்ளாங்குருகை வினைவுவோளே.
3.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரை பாய்வோளே.
4.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வெளவலின்
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே.
5.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தெண் திரை பாவை வெளவ
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே.
6.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண் கடல் பெருந்திரை மூழ்குவோளே.
7.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே.
8.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே.
1.
நன்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே.
2.
அம்ம வாழி பாண புன்னை
அரும்பு மலி கானல் இவ்வூர்
அலர் ஆகின்று அவர் அருளுமாறே.
3.
யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென்றன என் புரி வளைத் தோளே.
4.
காண்மதி பாண இருங்கழிப்
பாய் பரி நெடுந் தேர்க் கொண்கனொடு
தான் வந்தன்று என் மாமைக் கவினே.
5.
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.
6.
நாணிலை மன்ற பாண நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல் உகுப்போயே.
7.
நின்னொன்று வினவுவல் பாண நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே.
8.
பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாராதோயே.
9.
அம்ம வாழி கொண்க எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.
40.
காண்மதி பாண நீ உரைத்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.
1.
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பயலை செய்தன பனி படு துறையே.
2.
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே.
3.
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை
இனிய செய்த நின்று பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே.
4.
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
தனிக்குருகு உறங்கும் துறைவற்கு
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே.
5.
எக்கர் ஞாழல் சிறி இலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே.
6.
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற என் மாமைக் கவினே.
7.
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
தண் தழை விலையென நல்கினன் நாடே.
8.
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ்சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குதி காதலோயே.
9.
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமோ.
50.
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே.
1.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.
2.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே.
3.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே.
4.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.
5.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.
6.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெள் கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே.
7.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
காலையிருந்து மாலைச் சேக்கும்
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான்
தான் வந்தனன் எம் காதலோனே.
8.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு
கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிகும்
அம் மா மேனி எம் தோழியது துயரே.
9.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.
60.
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ
பண்டையின் மிகப் பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மயங்கினள் பெரிதே.
1.
பெருங்கடல் கரையது சிறு வெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பசந்து நுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே.
2.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே.
3.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்து என்
இறை ஏர் முன் கை நீக்கிய வளையே.
4.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே.
5.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே.
6.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே.
7.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல் கேள் என்னே.
8.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
துறை படி அம்பி அக மனை ஈனும்
தண்ணந் துறைவன் நல்கின்
ஒண்ணுதல் அரிவை பால் ஆரும்மே.
9.
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்
என் செயப் பசக்கும் தோழி என் கண்ணே.
70.
பெருங்கடல் கரையது சிறு வெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்றெவனோ.
1.
திரை இமிழ் இன்னிசை அளைஇ அயலது
முழவு இமிழ் இன்னிசை மறுகு தொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே.
2.
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரையென
இரவினானும் துயில் அறியேனே.
3.
இரவினானும் இன்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே.
4.
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன
மணங்கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கு அரி பரந்த உண்கண்
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே.
5.
எமக்கு நயந்து அருளினை யாயின் பணைத்தோள்
நல் நுதல் அரிவையொடு மென் மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே.
6.
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி
ஐது அமைந்து அகன்ற அல்குல்
கொய் தளிர் மேனி கூறுமதி தவறே.
7.
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங்கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே.
8.
தோளும் கூந்தலும் பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
என் கண்டும் நயந்து நீ நல்காகக் காலே.
9.
நல்குமதி வாழியோ நளி நீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள் சிறு நுதலே.
80.
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு நீர்
வலைவர் தந்த கொழு மீன் வல்சிப்
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
1.
நெய்தல் உண்கண் நேர் இறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்
உறைவு இனிது அம்ம இவ் அழுங்கல் ஊரே.
2.
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டு இவள் அணங்கியோனே.
3.
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.
4.
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகு இனம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று அவர் ஊரே
கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே.
5.
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
அரம் போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே.
6.
நாரை நல் இனம் கடுப்ப மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இத்துறைப்
பல் கால் வரூஉம் தேரெனச்
செல்லாதீமோ என்றனள் யாயே.
7.
நொதுமலாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தல் அம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக்கு உற்ற சில பூவினரே.
8.
இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரிது உடை காதலி கண்ணே.
9.
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன் படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழி என் கண்ணே.
90.
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற எம்
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே.
1.
கடல் கோடு செறிந்த வளை வார் முன் கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின் பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள் என்
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
2.
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழுங்கப்
பாடு இமிழ் பனித்துறையோடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி என் வளையே.
3.
வலம்புரி உழுத வார் மணல் அடை கரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க நீ தந்த
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே.
4.
கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க
நன் நுதல் இன்று மால் செய்தெனக்
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
5.
வளை படு முத்தம் பரதவர் பகருங்
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள்
கெடல் அருந் துயரம் நல்கிப்
படலின் பாயல் வெளவியோளே.
6.
கோடு ஈர் எல் வளைக் கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மட வரல் வேண்டுதி ஆயின்
தெண் கழி சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
7.
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலங் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
8.
வளையணி முன் கை வால் எயிற்று அமர் நகை
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந் தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.
9.
கானலம் பெருந்துறைக் கலி திரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே.
200.
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவினப்
பொலந் தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே.
**