*
1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப்
பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார்
என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு
இருந்தாள்.
2. சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக்
கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்
பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்
என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம்
செவிகொடுத்தான்.
3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு,
ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான
தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன்
புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக்
கொடுத்தாள்.
4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள்
தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை
அற்பமாக எண்ணினாள்
5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட
அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை
உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான்
கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்;
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக
என்றாள்.
6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன்
அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு
நலமானபடி அவளுக்குச் செய் என்றான்.
அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய்
நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே
சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து
வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என்
நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன்
நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு
என்றார்.
10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன்
சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி,
எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ
கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்;
கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு
இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை
எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு
விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக்
குடியிருப்பான் என்றார்.
13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும்
இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி,
தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று
பேரிட்டாள்.
14. ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ
என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
15. ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்;
ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல்
என்று பேரிட்டான்.
16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம்
எண்பத்தாறு வயதாயிருந்தான்.
*
1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது
வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான்
சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக
நடந்துகொண்டு உத்தமனாயிரு.
2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை
ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்
என்றார்.
3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து
வணங்கினான். தேவன் அவனோடே பேசி:
4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை
என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத்
தகப்பனாவாய்.
5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத்
திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால்,
உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே
ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள்
தோன்றுவார்கள்.
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான்
தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை
தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை
நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும்,
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய
சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத்
தேவனாயிருப்பேன் என்றார்.
9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும்,
உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என்
உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும்
நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள
வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால்,
உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும்
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;
11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை
விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும்
உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும்
ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன்
வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக்
கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக்
கொள்ளப்பட்டவனும்,
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என்
உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக
இருக்கக்கடவது.
14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற
நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என்
உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு
அறுப்புண்டுபோவான் என்றார்.
15. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி
சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது
அவளுக்குப் பேராயிருக்கும்.
16. நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு
குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும்,
அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை
ஆசீர்வதிப்பேன் என்றார்.
17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து:
நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு
வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன்
இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
18. இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று
ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.
19. அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள்
நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு
ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும்
அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய
உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்;
நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப்
பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு
பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய
ஜாதியாக்குவேன்.
21. வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப்
பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை
ஏற்படுத்துவேன் என்றார்.
22. தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு
எழுந்தருளினார்.
23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய
இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான்
பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள
ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச்
சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை
அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம்
விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன்
தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம்
விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று
வயதாயிருந்தான்.
26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும்
விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக்
கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள்
எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
*
1. பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத்
தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில்
கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
2. தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று
புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே,
அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு
ஓடித் தரை மட்டும் குனிந்து;
3. ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை
கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து
போகவேண்டாம்.
4. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும்,
உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில்
சாய்ந்துகொண்டிருங்கள்.
5. நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக்
கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம்
நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன்
இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ
சொன்னபடி செய் என்றார்கள்.
6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில்
சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய
மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
7. ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப்
பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச்
சீக்கிரத்தில் சமைத்தான்.
8. ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த
கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே
மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள்
புசித்தார்கள்.
9. அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே
என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
10. அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில்
நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்;
அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு
குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப்
பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக்
கேட்டுக்கொண்டிருந்தாள்.
11. ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று
முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு
சாராளுக்கு நின்றுபோயிற்று.
12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான்
கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு,
எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள்
நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ
என்று சொல்வானேன்?
14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்;
அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்
என்றார்.
15. சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள்.
அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
16. பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம்விட்டு, சோதோமை நோக்கிப்
போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய்
வழிவிட்டனுப்பினான்.
17. அப்பொழுது கர்த்தர் : ஆபிரகாம் பெரிய பலத்த
ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல
ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
18. நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
19. கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை
நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்
பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும்
செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று
கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
20. பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல்
பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும்
கொடிதாயிருப்பதினாலும்,
21. நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின்
கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ
என்று பார்த்து அறிவேன் என்றார்.
22. அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை
நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக
நின்றுகொண்டிருந்தான்.
23. அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து:
துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
24. பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள்
இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது
நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
25. துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத்
தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய்
நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக
நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
26. அதற்குக் கர்த்தர் : நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக்
கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன்
என்றார்.
27. அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும்
சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
28. ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்;
அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான்.
அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே
கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
29. அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே
காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது
நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
30. அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன்,
ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள்
அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான்
முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை
என்றார்.
31. அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்;
இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான்.
அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை
என்றார்.
32. அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம்
வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம்
பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ
என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை
அழிப்பதில்லை என்றார்.
33. கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்;
ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
*
1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு
வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும்
குனிந்து:
2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள்
திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில்
எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு
அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
3. அவன் அவர்களை மிகவும் வருந்திக்
கேட்டுக்கொண்டான்; அப்பொழுது
அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன்
புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு
விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
4. அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய
வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும்
நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
5. லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர்
எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை
எங்களிடத்தில் வெளியே கொண்டு வா
என்றார்கள்.
6. அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து,
தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
7. சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
8. இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு;
அவர்களை உங்களிடத்திற்கு வெளியே
கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி
செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே
வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும்
செய்யவேண்டாம் என்றான்.
9. அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா
நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச்
செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக
பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி,
லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக்
கிட்டினார்கள்.
10. அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை
வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள்
இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
11. தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய
மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்;
அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி
அலுத்துப்போனார்கள்.
12. பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும்
உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன்
குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில்
உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த
ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
13. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல்
கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக்
கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
14. அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை
விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள்
எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப்
பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய
மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன்
பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
15. கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி:
பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன்
மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும்
அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத்
துரிதப்படுத்தினார்கள்.
16. அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர்
அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன்
கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு
குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு
வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
17. அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு,
அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச்
சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ
என்றார்.
18. அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
19. உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்
பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப்
பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக
என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான்
மரித்துப்போவேன்.
20. அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு
ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய்
இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும்,
அது சின்ன ஊர்தானே என்றான்.
21. அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான்
கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு
அநுக்கிரகம்பண்ணினேன்.
22. தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே
போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்;
ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
23. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
24. அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும்
கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து
கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
25. அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப்
பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும்
அழித்துப்போட்டார்.
26. அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
27. விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு
முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
28. சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும்,
சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப்
பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
29. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன்
ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம்
கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து
தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய்,
அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே
வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய
இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய
தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற
முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு
மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா
என்றாள்.
33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்
கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே
சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன்
உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி
நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்
குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி
உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்
குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது
இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள்
சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள்
தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப்
என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற
மோவாபியருக்குத் தகப்பன்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப்
பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும்
இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
*
1. ஆபிரகாம் அவ்விடம்விட்டு, தென்தேசத்திற்குப்
பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி,
கேராரிலே தங்கினான்.
2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி
என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய
அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
3. தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே
தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள்
ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
4. அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்:
ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
5. இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே
சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும்
சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான
கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
6. அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச்
செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு
விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்;
ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு
இடங்கொடுக்கவில்லை.
7. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன்
ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல்
செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும்
உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று
அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச்
சொன்னார்.
8. அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன்
ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச்
சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி
சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
9. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து;
நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என்
ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம்
சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம்
செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில்
செய்தாயே என்றான்.
10. பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக்
கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
11. அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம்
இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக்
கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
12. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என்
தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல;
அவள் எனக்கு மனைவியானாள்.
13. என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்
திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும்
இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ
எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில்
சொல்லியிருந்தேன் என்றான்
14. அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும்,
வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக்
கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும்
அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
15. பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக
இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு
என்று சொன்னான்.
16. பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம்
வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற
எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன்
முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள்
கடிந்து கொள்ளப்பட்டாள்.
17. ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர்
அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம்
அடைத்திருந்தபடியால்,
18. ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்;
அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன்
மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி,
பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
*