*
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது;
ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல்
அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்,
வெளிச்சம் உண்டாயிற்று.
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்;
வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப்
பிரித்தார்.
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு
இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி
முதலாம் நாள் ஆயிற்று.
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு
உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப்
பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே
இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற
ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்;
சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள்
ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில்
சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்;
அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச்
சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப்
பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள்
விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே
கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது
என்றார்; அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே
விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள்
ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக்
கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது
நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள்
ஆயிற்று.
14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம்
உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே
சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள்
அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும்
வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற
ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது
அப்படியே ஆயிற்று.
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய
சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும்,
நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும்
வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற
ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள்
ஆயிற்று.
20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம்
என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது
திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள்
ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும்
ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப்
பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி,
சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில்
பெருகக்கடவது என்றும் சொன்னார்.
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள்
ஆயிற்று.
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான
ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும்
பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப்
பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும்,
ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும்
பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது
நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும்
மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின்
மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும்,
பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும்
ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும்
பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை
நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும்
ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல
ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று
சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்
பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித
விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள்
உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள
சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள்
எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும்
ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே
ஆயிற்று.
31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின
எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள்
ஆயிற்று.
*
1. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும்
உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே
நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய
கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே
ஓய்ந்திருந்தார்.
3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய
கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே
ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப்
பரிசுத்தமாக்கினார்.
4. தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின
நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
5. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும்
உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும்
முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல்
இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த
மனுஷனும் இருந்ததில்லை.
6. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி,
பூமியையெல்லாம் நனைத்தது.
7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே
உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,
மனுஷன் ஜீவாத்துமாவானான்.
8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை
உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
9. தேவனாகிய கர்த்தர் , பார்வைக்கு அழகும் புசிப்புக்கு
நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே
ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும்
பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
10. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி,
அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
11. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம்
முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
12. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே
பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
13. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா
தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது
அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து
என்று பேர்.
15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில்
அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும்
காக்கவும் வைத்தார்.
16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல
விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்
புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்
என்று கட்டளையிட்டார்.
18. பின்பு தேவனாகிய கர்த்தர் : மனுஷன் தனிமையாயிருப்பது
நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும்,
ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே
உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று
பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்;
அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ
அதுவே அதற்குப் பேராயிற்று.
20. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும்
பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு
அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்;
அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச்
சதையினால் அடைத்தார்.
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை
மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில்
கொண்டுவந்தார்.
23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும்,
என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள்
மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்
என்றான்.
24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு,
தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே
மாம்சமாயிருப்பார்கள்.
25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும்
நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
*
1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு
ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.
அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின்
கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது
உண்டோ என்றது.
2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள
விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்
குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத்
தொடவும் வேண்டாம் என்று சொன்னார்
என்றாள்.
4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே
சாவதில்லை;
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும்
என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்
என்றும் தேவன் அறிவார் என்றது.
6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு
நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு
இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு,
அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும்
கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும்
திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று
அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை
உண்டுபண்ணினார்கள்.
8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற
தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய
கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே
ஒளித்துக்கொண்டார்கள்.
9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு:
நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு,
நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து,
ஒளித்துக்கொண்டேன் என்றான்.
11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு
அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு
விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த
ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக்
கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ
இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்:
சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்
பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல
நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும்
சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து,
உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை
உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர்
குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை
மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை
பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன்
உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச்
செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான்
உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி
உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும்
நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின்
பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்
உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ
மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்;
ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம்
தாயானவள்.
21. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல்
உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
22. பின்பு தேவனாகிய கர்த்தர் : இதோ, மனுஷன் நன்மை தீமை
அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;
இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின்
கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச்
செய்யவேண்டும் என்று,
23. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய
கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக்
காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும்,
வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும்
வைத்தார்.
*
1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள்
கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு
மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்;
ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப்
பயிரிடுகிறவனானான்.
3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக்
கர்த்தருக்கு க் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில்
கொழுமையானவைகளிலும் சிலவற்றைக்
கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும்
கர்த்தர் அங்கிகரித்தார்.
5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.
அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி,
அவன் முகநாடி வேறுபட்டது.
6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன்
எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
7. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை
செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை
ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள்
வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன்
சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக்
கொலைசெய்தான்.
9. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே
என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு
நான் காவலாளியோ என்றான்.
10. அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய
இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே
வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப்
பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12. நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக்
கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்
என்றார்.
13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட
தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
14. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான்
உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று
அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும்
என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக்
கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று
சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்
கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு
அடையாளத்தைப் போட்டார்.
16. அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு,
ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17. காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி,
ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு
பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய
ஏனோக்குடைய பேரை இட்டான்.
18. ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப்
பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப்
பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
19. லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்;
ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச்
சில்லாள் என்று பேர்.
20. ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன்
கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை
மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
21. அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர்
நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
22. சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன்
பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்
யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி
நாமாள்.
23. லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே,
நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே,
என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக்
காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத்
தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;
24. காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக
எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
25. பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு
குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த
ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக்
கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத்
என்று பேரிட்டாள்.
26. சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று
பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத்
தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
*
1. ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த
நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை
ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு
மனுஷர் என்று பேரிட்டார்.
3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன்
ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று
பேரிட்டான்.
4. ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
5. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம்
தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
6. சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
7. சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து,
குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
8. சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப்
பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப்
பெற்றான்.
10. ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
11. ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து
வருஷம்; அவன் மரித்தான்.
12. கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப்
பெற்றான்.
13. கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று
நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
14. கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப்
பத்து வருஷம்; அவன் மரித்தான்.
15. மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப்
பெற்றான்.
16. மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று
முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
17. மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத்
தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
18. யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப்
பெற்றான்.
19. யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20. யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து
அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப்
பெற்றான்.
22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம்
தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து
வருஷம்.
24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில்,
காணப்படாமற்போனான்; தேவன் அவனை
எடுத்துக்கொண்டார்.
25. மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது,
லாமேக்கைப் பெற்றான்.
26. மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று
எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
27. மெத்தூசலாவுடைய நாளெல்லாம்
தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்;
அவன் மரித்தான்.
28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு
குமாரனைப் பெற்று,
29. கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும்,
நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்
என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
30. லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத்
தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
31. லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு
வருஷம்; அவன் மரித்தான்.
32. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத்
என்பவர்களைப் பெற்றான்.
*